TAMIL NADU

திருச்சி துவாக்குடி அருகே உள்ள குவாரி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு .

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆலந்துறை. இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தனுசு கோபி (14) இவர் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தூர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் துவாக்குடி போலீசில் தனது மகன் காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று மாலை தனுசு கோபியின் சைக்கிள் துரை குவாரி அருகே நிற்பதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தனுசு கோபியின் பெற்றோர், உறவினர் குவாரியை சுற்றி தேடினர். தனுசு கோபி சுமார் 200 அடி பள்ளத்தில் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து சிறுவன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் பிரபாகரன்